Monday, February 25, 2013

திரை விமர்சனம் - ஹரிதாஸ்


அமர்க்களமான காதல் பாடல்கள் இல்லை, சிலிர்ப்பூட்டும் வசனங்கள் இல்லை, தேவையற்ற நகைச்சுவைகள் இல்லை, உபதேசங்கள் இல்லை என்று ஒரு படம் வந்தால் எப்படி இருக்கும் என்ற ஆதங்கம் பல ரசிகர்களுக்கு உண்டு. அதைப் பூர்த்தி செய்திருக்கிறது 'ஹரிதாஸ்' திரைப்படம். ஆட்டிஸம் பாதித்த மகனுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது? எப்படி புரியும்படி சொல்வது என்று திணறும் அப்பா, தனது உணர்வை அப்பாவிடம் சொல்ல முடியாமல் குதிரை மைதானத்திற்கு ஓடும் சிறுவன், தேறாது என்று தான் ஒதுக்கிய சிறுவன் தனக்கு முன்னாலேயே பயிற்சி எடுப்பதை அதிசயமாகப் பார்க்கும் ரன்னிங் கோச் என்று காட்சிகளே பேசும் தருணங்கள் அழகானவை. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவதாஸுக்கு (கிஷோர்) ஆதி என்ற ரவுடியைப் பிடிக்கும் பொறுப்பு தரப்படுகிறது. இந்த நேரத்தில் ஊரில் வசிக்கும் அம்மா இறக்க நேரிட, பாட்டியிடம் வசித்துவந்த மகன் ஹரிதாசை தன்னிடம் அழைத்துக்கொள்கிறார். ஹரிதாஸ் ஆட்டிஸம் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான். சிவதாஸ் மனைவியை இழந்தவர் என்பதால் மகனைத் தனியாக வலர்க்க வேண்டிய பொறுப்பு அவருக்கு. அவனைப் பள்ளியில் சேர்த்தால் கூடவே யாராவது இருந்து அவனுக்கு உதவி செய்தால்தான் சேர்த்துக்கொள்ள முடியும் என்று தலைமை ஆசிரியை கறாராகச் சொல்லிவிடுகிறார். அம்மா இல்லாத பையன் என்பதால் அப்பாவே அவனைப் பார்த்துக்கொள்ள விடுமுறை எடுக்கிறார். ஹரிதாசின் ஆசிரியை அமுதவல்லி (சினேகா) இதுபோன்ற சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கையாண்ட அனுபவம் உள்ளவர். அவரது உதவி சிவதாஸுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. ஆனாலும் மகனைப் படிக்கவைக்கவோ அவன் வேலைகளை அவனையே செய்துகொள்ள வைக்கவோ அவரால் முடியவில்லை. இந்தச் சமயத்தில் நிகழும் ஒரு திருப்பத்தால் தனது மகனின் உள்ளார்ந்த இயல்பு என்ன என்பதைக் கண்டுபிடிக்கிறார். அது ஒரு புதிய திறப்பை அளிக்கிறது. இந்த நேரத்தில் ஆதியால் தனது நண்பன் கடத்தப்பட்டது தெரிந்து சிவதாஸ் மீண்டும் களம் இறங்க வேண்டியிருக்கிறது. மகனைப் பார்த்துக்கொள்வதற்கும் ஆதியை வேட்டையாடுவதற்கும் இடையே அவர் சிக்கிக்கொள்கிறார். இந்தச் சிக்கலின் முடிவு என்ன என்பது மீதிக்கதை. அர்த்தமுள்ள ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற திரைக்கதையை அமைத்திருக்கும் ஜி.என்.ஆர். குமாரவேலனுக்குப் பாராட்டுக்கள். கதையின் ஆதாரமான தன்மையையும் பாத்திரங்களின் இயல்பையும் நுட்பமாகக் காட்சிப்படுத்தும் விதம் அற்புதம். அப்பாவும் மகனும் மழையில் நிற்கும் காட்சி, மகன் குதிரையோடு ஓடும் காட்சி என்று பல காட்சிகள் அழகாக உள்ளன. பையன் மீது பெரும் ஈடுபாடு கொண்ட ஆசிரியையின் மனதுக்குள் நடக்கும் மாற்றங்களும் அதற்கு சிவதாஸ் எதிர்வினை ஆற்றும் விதமும் மிகவும் பக்குவமாகக் கையாளப்பட்டிருக்கின்றன. மென்மையான காட்சிகளை மட்டுமில்லாமல் ரவுடிகளைத் தீர்த்துக் கட்டும் காவல்துறையினரின் அதிரடியான வழிமுறைகளையும் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் குமாரவேலன். பல படங்களில் வில்லனாக வந்திருக்கும் கிஷோர் இந்தப் படத்தில் மகனுக்காகப் போராடும் தந்தையாகவும் தைரியமான போலீஸ் அதிகாரியாகவும் பிரகாசிக்கிறார். இதுபோன்ற வேடங்களை ஏற்ற அனுபவம் உள்ள சினேகா அமுதவல்லி டீச்சர் பாத்திரத்தில் பளிச்சிடுகிறார். நாசுக்காக காதலைச் சொல்லும் விதம் ரசிக்கவைக்கிற்து. ஆட்டிஸம் பாதித்த சிறுவனாக வரும் பிருத்விராஜ் தாசுக்கு இந்த படம் நல்ல அறிமுகம். மூளை பாதித்த சிறுவனாக வாழ்ந்திருக்கிறார். அவரை அற்புதமாக நடிக்க வைத்திருக்கும் இயக்குநரை அதற்காகவே மீண்டும் ஒரு முறை பாராட்டலாம். படம் அவ்வப்போது தொய்வடையும்போது தூக்கி நிறுத்த வேண்டிய பரோட்டா சூரியின் நகைச்சுவை அந்த அளவுக்கு வலுவாக இல்லை. யூகி சேதுவும், ராஜ் கபூரும் வரும் சில காட்சிகள் படத்திற்கு அர்த்தம் தருகின்றன. ரத்னவேலுவின் ஒளிப்பதிவு படத்தைக் கவிதையாக உணரச் செய்கிறது. விஜய் ஆண்டனியின் பாடல்களை விடவும் பின்னணி இசை நன்றாக உள்ளது. 'அன்னையின் கருவில்' என்ற பாடல் மனதில் நிற்கிறது. வலுவான கதையும் காட்சியமைபுகளும் இருந்தாலும் ஆங்காங்கே ஆவணப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம். ஆட்டிஸம் பாதித்த சிறுவனைப் பைத்தியம் என்று ஒதுக்கும் சமூகத்தின் பொதுப் போக்கைக் காட்டும் காட்சிகள் தேவைதான். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அது வருகிறது. இதுபோன்ற சிறுவர்களைப் பார்த்துக்கொள்ள்வதில் உள்ள சிரமங்களைச் சொல்வதற்கும் ஒரே மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தவிர்த்திருக்கலாம். இதுபோன்ற சில நெருடல்கள் இருந்தாலும் வலுவான கதை, பொருத்தமான திரைக்கதை, அற்புதமான காட்சிப் படிமங்கள் ஆகியவை கொண்ட அர்த்தமுள்ள திரைப்படங்கள் தமிழில் வருவது அரிது. அத்தகைய அரிய படங்களில் ஒன்று ஹரிதாஸ்.

Tuesday, February 19, 2013

காவிரிப் பிரச்சினை ஜீவ நதியும் ஜீவ மரணப் போராட்டமும்

தென்னகத்தின் மிகப் பழமையான மாநிலங்களும் அண்டைய மாநிலங்களுமான தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் தீராத பிரச்சினை காவிரி நதிநீர்ப் பங்கீடு. இதில் ஏற்பாடும் சிக்கல்களால் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அரசியல் கட்சிகள் காவிரி பற்றி வீர வசனங்கள் பேசி ஆட்சியைக் கைப்பற்றுகின்றன. போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் காவிரி பிரச்சினை மட்டும் முடிந்தபாடில்லை. இந்த ஆண்டு கர்நாடகத்திலும் வறட்சி அதிகமாகிவிட்டதாக அம்மாநில அரசு சொல்கிறது. தமிழகத்துக்கு தண்ணீர் விட்டால் கர்நாடகம் வறட்சியில் சிக்கிவிடும் என்கிறார்கள். வழக்கம்போல தேசியக் கட்சிகள் இரண்டு மாநிலங்களிலும் மாறுப்பட்ட நிலைகளை எடுத்துவருகின்றன. அரசியல் பரமபத விளையாட்டில் நிரந்தர இடம் பிடித்திருக்கும் காவிரிப் பிரச்சினை தற்போது ஆவேசமான கட்டத்தை எட்டியுள்ளது. என்னதான் நடக்கிறது காவிரி பிரச்சினையில்? காவிரி நதிநீர்ப் பங்கீட்டின் வரலாறு 90 ஆண்டுகள் பழமையானது. 1924ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்துக்கும், மைசூர் அரசாங்கத்துக்கும் காவிரி நதி நீர்ப் பங்கீடு சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது குடகு மாவட்டம் சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி, தமிழகத்தில் இருக்கும் 18 ஏக்கர் பாசன நிலமும், கர்நாடகத்தில் 3 ஏக்கர் பாசன நிலமும் காவிரி நீர் பயன்பாட்டில் வந்தன. கர்நாடக அரசு ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 95 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் என்று முடிவானது. இந்த ஒப்பந்தம் 1974இல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் 1972இல் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி காவிரி ஒப்பந்ததத்தை நீடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்க்கைத் தமிழக அரசு தொடர்ந்து நடத்த முடியாத அளவுக்கு அரசியல் நிர்ப்பந்தங்கள் எழுந்தன. அன்று இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்துக் கருணாநிதியை மிரட்டியதால் தமிழகம் பணிய நேரிட்டது என்று கருணாநிதியை விமர்சிப்பவர்கள் சொல்கிறார்கள். எது எப்படியோ, 50 ஆண்டுகள் கழிந்தவுடன் ஒப்பந்தமும் காலாவதியானது. காவிரியின் உற்பாத்தி ஸ்தானம் கார்நாடகத்தில் இருப்பதால் அதன் நீரைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தம் காலாவதியானது கர்நாடகத்திற்குச் சாதகமாக அமைந்தது. குறுகிய காலத்தில் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய மூன்று அணைகளைக் கர்நாடக்க மாநிலம் கட்டியது. அதனால் காவிரி நீர் பழமையான கிருஷ்ணராஜ சாகர் அணைக்குக்கூட வரவில்லை. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகம் காரணம் சொல்லத் துவங்கியது. அன்று ஆரம்பித்த காவிரிப் பிரச்சினை இன்றுவரை தொடர்கிறது. இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் உரிய பலனைப் பெற்றுத் தராததால் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுக்கென நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. பிரச்சினை குறித்த வாதங்களையும் யதார்த்த நிலவரங்களையும் அலசி ஆராய்ந்த மான்றம், தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்ன்று தீர்ப்பளித்தது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் இந்தத் தீர்ப்புகளைக் கர்நாடகம் தொடர்ந்து உதாசீனப்படுத்திவருகிறது. உபரியாஅக மழை பெய்யும் ஆண்டுகளைத் தவிர மற்ற எல்லா ஆண்டுகளிலும் பிரச்சினை எழுகிறது. முற்றுகிறது. பேச்சுவார்த்தைகள் பலனின்றி முறிகின்றன. சில ஆண்டுகளாக மழையும் பொய்த்துவருகிறது. இதற்கிடையில் 1974 தொடங்கி இன்றுவரை கர்நாடகம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாசன நிலங்களை அதிகரித்துவருகிறது. 3 லட்சம் ஏக்கர் பாசன நிலத்திலிருந்து 18 லட்சம் ஏக்கராகப் பாசன நிலமாக கர்நாடகம் அதிகரித்துள்ளதே பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் தமிழக டெல்டா விவசாயிகள். சில ஆண்டுகளாகவே டெல்டா பகுதிகளில் மழை சரியாக பொய்வதில்லை. கர்நாடகம் பல அணைகளைக் கட்டி காவிரி நீரை தங்களுக்குள்ளேயே முடக்கிவிடுவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருவதில்லை. இந்த ஆண்டு பிரச்சினை இன்னும் மோசமாகியது. கர்நாடகத்திலேயே வறட்சி நிலவுவதால் கொஞ்சம்கூட தண்ணீர் விட முடியாது என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அடம் பிடித்தார். அதையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா நடுவர் மன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அணுகினார். தமிழக டெல்டா விவசாயிகளுக்குத் தேவைப்படும் நீர் அளவைப் பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய நிபுணர் குழுவை நடுவர் மன்றம் நியமித்தது. அந்தக் குழு பிப்ரவரி 5ஆம் தேதி தமிழக பாசன நிலங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் கர்நாடகம் தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி தண்ணீரை பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் திறந்து விட வேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு முன்பு அதே அளவுள்ள நீரை மேட்டூர் அணையிலிருந்து தமிழக அரசு திறந்து விட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டது. இந்த உத்தரவு ஒருதலைப்பட்சமானது என்று தமிழக விவசாயிகள் கருதுகிறார்கள். காவிரி டெல்டா பகுதியில் மொத்தம் 9 லட்சம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ளதாகவும் அதில் சரியான நீர் வளம் இல்லாமல் ஏற்கனவே 3 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் பயிர்கள் கருகிவிட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது 6 ஏக்கர் நிலத்தில் நீர் வேண்டிப் பயிர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது உடனடியாக அறுவடை செய்யப்படவிருக்கும் 3.25 லட்சம் ஏக்கரை மட்டுமே மத்திய குழுவினர் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளார்கள். மேலும் பல லட்சம் ஏக்கர் பயிர்களை மத்திய குழு ஒரே நாளில் கணக்கெடுப்பது சாத்தியமானதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் இந்தக் குறைந்த அளவைக்கூடக் கர்நாடகம் தர மறுப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் நடந்துவரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் காவிரி டெல்டா விவசாயிகளின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. பயிர் விளைச்சலின்றி பாதிக்கப்பட்டுள்ள டெல்டா விவசாயிகளுக்குக் குறைந்தது 25,000 ரூபாயாவது நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து மாநில நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் டெல்டா பகுதியில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்து சமர்ப்பிக்கும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று ஜெயலலிதா பிப்ரவரி 3ஆம் தேதி அறிவித்தார். அடுத்த மூன்று நாட்கள் மாநிலக் குழுவினர் ஆய்வு செய்து ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் பிப்ரவரி 7ஆம் தேதி சட்டமன்றத்தில் ஜெயலலிதா நிவாரண உதவிகளை அறிவித்தார். டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் முன்னுரிமை அளிப்பது, போதிய பயிர் காப்பீடு அளிப்பது, 50 சதவீதத்துக்கு மேல் மகசூல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15,000 ரூபாய் நிவாரணம் வழங்குவது ஆகியவை அந்த அறிவிப்புகளில் குறிப்பிடத்தக்கவை. தமிழக அரசின் அறிவிப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் கிளம்பியுள்ளன. இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார். இந்த அறிவிப்பு போதுமானதல்ல என்றும் இது வெறும் கண்துடைப்பே என்றும் அவர் குறை கூறினார். குறைவாக மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கதி என்னவென்று அவர் கேள்வி எழுப்பினார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்களும் இந்த அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேலும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படாததும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதை அடுத்து கர்நாடக அரசும் நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தியது. தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கர்நாடக விவசாயிகள் அதிருப்தியடைந்தார்கள். ‘‘நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் சட்டச் சிக்கல் ஏற்படும் என்ற காரணத்துக்காகவே தண்ணீர் திறந்து விடப்பட்டது. கர்நாடகத்தின் உரிமையை நிலைநாட்டப் பதவியைத் துறக்கவும் தயார்’’ என்று அம்மாநில சட்டமன்றத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்தார். அங்கு ஏற்பட்ட பதற்றத்தால் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 12ஆம் தேதியன்று மறு ஆய்வு மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்தது. தமிழகத்திற்குத் தேவையான நீர் மேட்டூர் அணையிலேயே இருப்பதாகவும், தண்ணீர் திறந்து விட்டால் கர்நாடக விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாகத் தமிழக அரசு 13ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்துள்ளது. இந்தச் சட்டப் போரால் காவிரி பிரச்சினை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய சூழலில் இரண்டு மாநிலங்களிலும் சரியான மழையின்றி வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில் பேச்சுவார்த்தைகளும் சட்ட நடவடிக்கைகளும் மட்டும் தீர்வாக அமையாது என்றும் சிலர் கருதுகிறார்கள். “தலைக்காவிரியில் இருந்து காவிரி நதி பாய்கிறது. அது இரண்டாகப் பிரிந்து தமிழகத்துக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் செல்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பாயும் நதி வீணாகக் கடலில் கலக்கிறது. அந்த நீரை நேத்னாவதி அணையில் சேமித்து வைப்பதன் மூலம் கிடைக்கும் 400 டி.எம்.சி. தண்ணீரை இரண்டு மாநிலங்களும் சரிபாதியாகப் பங்கிட்டுக் கொள்ள முடியும். இப்போது தமிழகத்தின் தேவை 192 டி.எம்.சி. மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதை நாங்கள் மாற்று ஏற்பாடாக முன்வைக்கிறோம்” என்கிறார் பாரதிய கிசான் (விவசாயிகள்) சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், வழக்கறிஞருமான அய்யாக்கண்ணு. கங்கையும் காவிரியும் இணையும் வகையில் தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தினால் கடலில் கலக்கும் 30,000 டி.எம்.சி. தண்ணீர் மிச்சமாகும். இந்தியாவின் தென்மூலையில் தமிழகம் இருப்பதால் அதில் சிறிய அளவு நீராவது கிடைத்தால் தமிழகம் வளமான பூமியாகும் என்று அவர் நம்புகிறார். மழையின் பங்கு கணிசமாக குறைந்துவரும் இந்த சமயத்தில் மாற்று வழியையும் யோசிக்க வேண்டியுள்ளது என்று பலர் கருதுகிறார்க்கள். பல ஆண்டுகளாக நீடித்துவரும் காவிரிப் பிரச்சினை இரண்டு மாநிலங்களிலும் வலுவான அரசியல் ஆயுதமாகியுள்ளது. கர்நாடகத்தை ஆளும் தேசியக் கட்சிகள் தமிழகத்தின் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் இல்லை என்பதால் இரட்டை வேடம் போடுவதாக விவசாயிகள் நினைக்கிறார்கள். அதை முற்றாகத் தவிர்த்து இதை ஒரு வாழ்வாதாரப் பிரச்சினையாகப் பார்த்தால் மட்டுமே பிரச்சினை தீரும்.

ஹெலிகாப்டர் பேர ஊழல் காங்கிரஸின் அச்சை முறிக்குமா இந்த மயிலிறகு?

துரித கதியில் ஒரு பின்னோட்டம்: 1987ஆம் ஆண்டு. அன்றைய காங்கிரஸ் அரசை ஆண்டுகொண்டிருந்த ராஜிவ் காந்தி மீது எதிர்க்கட்சிகள் ஃபோபர்ஸ் ஊழலைச் சுமத்தின. இந்திய ராணுவத்திற்கு ஃபோபர்ஸ் போர் விமானம் வாங்கியதில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த குவாத்ரோட்சி சம்மந்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. அப்போதுதான் ராஜிவ் காந்தியின் அரசில் இருந்தும், கட்சியில் இருந்தும் வெளியேறிய வி.பி.சிங் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார். ஃபோபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்தார். 1989இல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதற்குப் பிறகு மூன்று முறை காங்கிரஸ் பிரதமர்கள் ஆட்சியைப் பிடித்தாலும் கடந்த 25 ஆண்டுகளில் பெரும்பான்மை என்பது கைக்குச் சிக்காத புகையாக மறிவிட்டது. உண்மையில் தற்போது இருக்கும் கூட்டணி ஆட்சி முறைக்கு விதை போட்டதே அந்த தேர்தல்தான் என்றும் சொல்லலாம். சரியாக இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஊழல் சரித்திரம் மீண்டும் இத்தாலி நாட்டுடன் இணைந்திருக்கிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் அனைத்திலும் ஊழல் செய்த அரசியல் கட்சி என்ற எதிர்க்கட்சிகளின் கிண்டலை காங்கிரஸ் சந்தித்தாலும் கட்சியின் செல்வாக்கு இன்னும் முழுமையாகக் குறைந்துவிடவில்லை. ஆனால் இத்தாலியுடன் அதன் ஊழல் கறைகள் சம்மந்தப்படும் போதெல்லாம் இந்திய மக்கள் காங்கிரசை சந்தேக கண்ணோடுப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. சமீப காலமாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், நிர்வாக சீர்குலைவுகள் ஆகியவற்றால் பழுதுப்பட்டிருக்கும் காங்கிரசின் பெயர், கடந்த வாரம் வெளியான ஹெலிகாப்டர் ஊழல் காரணமாக அதல பாதாளத்துக்குச் செல்லும் என்ற யூகம் கிளம்பியிருக்கிறது. 2010ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்கு ‘ஏ டபள்யூ 101’ என்னும் 12 போர் ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன. இதற்காக ரூ.3600 கோடி செலவிடப்பட்டது. அதற்காக சிலருக்கு பேரத்தின் அடிப்படையில் ரூ.362 கோடி கமிஷனாக தரப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டின் அரசு பங்கு வகிக்கும் ‘ஃபின்மெக்கானிக்கா’ என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘அகஸ்தா வெஸ்ட்லாண்ட்’ என்ற ஹெலிகாப்டர் நிறுவனம் இந்த ஆர்டரைப் பெற்று ஹெலிகாப்டர்களை தயாரித்துக் கொடுத்துள்ளது. வணிக பேரங்களில் லஞ்சம் தருவது என்பது இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாதது என்றாலும் இந்திய நாட்டு சட்டத்தின்படி இது குற்றம் என்பதால் இந்த தகவலை வெளியிடுவதாக இத்தாலி நாட்டுப் பிரதமர் அறிவித்தார். முன்னூறு கோடியெல்லாம் ஒரு ஊழலா என்று கேட்கும் அளவு இந்தியப் பொது வாழ்க்கை ‘முன்னேறி’விட்டது. சில ஆண்டுகளாகப் பல லட்சம் கோடிகளில் நடைபெறும் இமாலய ஊழல் குற்றச்சாட்டுகள் வந்துகொண்டிருப்பதால் சில கோடி ரூபாய்களில் நடக்கும் ஊழல்களைக் கண்டு அதிர்ச்சி அடையாமல் இருக்க இந்திய மக்கள் பழகியிருக்கிறார்கள். ஆனாலும் ‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்’ (அளவுக்கு அதிகமாக ஏற்றப்பட்டால் மயிலிறகும் வண்டியின் அச்சை முறிக்கும்) என்று வள்ளுவர் சொல்வதுபோல இந்தச் சிறிய ஊழலும் காங்கிரஸுக்குப் பெரும் தலைவலியாக அமையலாம். முதலாவதாக, ஹெலிகாப்டர் வாங்கியது ராணுவ விஷயத்திற்காக என்பதால் நாட்டின் பாதுகாப்பு சம்மந்தமாகவும் கேள்வி எழுந்துள்ளது. இந்த ஊழலை ஃபோபர்ஸ் ஊழலோடு எதிர்க்கட்சிகள் ஒப்பிடுகின்றன. காங்கிரஸ் இந்த ஒப்பீட்டை மறுக்கிறது. இந்த முறைகேட்டில் காங்கிரஸ் ஆட்சி, முந்தைய பா.ஜ.க. ஆட்சி இரண்டுமே சம்மந்தப்பட்டிருப்பதாகவும், இது குறித்து விரிவான விசாரணை நடந்த பிறகுதான் சொல்ல முடியும் என்று மத்திய அமைச்சர்கள் மணீஷ் திவாரி, அந்தோணி ஆகியோர் கூறுகிறார்கள். தற்போதைய சூழல் காங்கிரசுக்குப் போதாத காலமாக இருக்கிறது. பா.ஜ.க.வைச் சேர்ந்த நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றிபெற்று குஜராத்தின் முதல்வராக அமர்ந்துள்ளார். வளர்ச்சி அரசியலும், இந்துத்துவ அடையாளமும் பரவலான மக்கள் ஆதரவும் அவரை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக நீடித்துவரும் காங்கிரஸ் ஆட்சி சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு நல உதவிகளையும், ஊக்கத் தொகையையும் வழங்கி வருகிறது. மேலும் சிறுபான்மையினத்தவருக்குத் தனி இட ஒதுக்கீடும் தர முயற்சித்துவருகிறது. இதனால் காங்கிரஸ் அரசை சிறுபான்மையினருக்கு ஆதரவானது என்று பா.ஜ.க. குற்றம்சாட்டினாலும் அதைக் காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்போது மோடியின் வெற்றி மத்திய அரசை கவலை அடையச் செய்வதால் காங்கிரஸின் செயல்திட்டங்கள் மாறுவதாகத் தோன்றுகிறது. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தைக் கடுமையான அணுகுமுறையின் துணையோடு ஒடுக்குவதை கொள்கை ரீதியாகவே ஆதரிக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி பயங்கரவாத நடவடிக்கைகளை அணுகும் முறை வித்தியாசமானது. பயங்கரவாதத்தை வேறறுப்போம் என்று அவர்களும் சொன்னாலும் பா.ஜ.க. அளவுக்கு அந்த விஷயத்தில் தீவிரப் போக்கு உள்ள கட்சியாக காங்கிரஸ் பார்க்கப்படவில்லை. ஆனால் சமீப காலத்தில் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதும் தூக்கிலிடப்பட்ட விதமும் பா.ஜ.க.வின் செயல்திட்டத்தை கையில் எடுப்பதற்கு காங்கிரஸ் திட்டமிடுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதிலும், ஒரு முக்கிய வித்தியாசத்தை கவனிக்க வேண்டும். கசாப் தூக்கிலிடப்பட்டப் போது மரண தண்டனைக்கு எதிராக பொதுவான குரல் மட்டுமே எழுந்தது. அவரது குற்றத்தின் தன்மை பற்றி யாருமே கேள்வி எழுப்பவில்லை. ஆனால் அப்சல் குருவின் தூக்கில் அவரது குற்றம் பற்றியும் கேள்வி எழுகிறது. அவனைத் தூக்கில் போட்டதால் காஷ்மீரில் பதற்றம் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக மரண தண்டனையை நிறைவேற்றாமல் தேர்தல் நெருங்கும்போது தண்டனையை அமல்படுத்துவது இந்துத்துவ வாக்குகளைக் கவரும் முயற்சியே என்று பல ஊடகங்கள் விமர்சிக்கின்றன. ஆனால் காங்கிரசின் இந்த திட்டம் வெற்றிபெறாது என்கிறார் சென்னையைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர்களில் ஒருவரான சரவணன். “மோடியின் வெற்றிக்கு இந்துத்துவப் பின்னணி மட்டுமே காரணம் அல்ல. அவர் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துகிறார். ஆனால் அடித்தட்டு மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்விலும், நிர்வாக குளறுபடிகளிலும் கவனம் செலுத்தாமல் இதுபோன்ற திட்டங்களை தீட்டுவது நகைப்புக்குரியது. சிறுபான்மையினருக்கான அதிக சலுகைகள், அதை முன்னிட்டு இந்துக்களின் இட ஒதுக்கீட்டைக் குறைப்பது போன்ற செயல்களால் காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று சாதாரண மக்களுக்கும் தெரிந்துள்ளது” என்று கருதுகிறார் சரவணன். இந்த தூக்கு தண்டனைகளால் காங்கிரசுக்கு வழக்கமாகக் கிடைத்துவரும் இடதுசாரி சிந்தனையுள்ளவர்களின் வாக்கு வங்கியும் பிளவுபடும் என்கிறார் இவர். 1980களில் ராமர் கோயில் பிரச்சினை தொடங்கியபோது அதை சாதகமாக்கிக்கொள்ள திட்டமிட்ட ராஜிவ் காந்தி, ராமர் பிறந்த இடம் என்று சொல்லப்படும் இடத்தைத் திறக்க உத்தரவிட்டார். ஆனால் அது காங்கிரசுக்கு சாதகமாக அமையவில்லை. இந்த விவகாரம் பா.ஜ.க.வின் செல்வாக்கை வளர்க்க உதவியது என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம். டெல்லியில் நடந்த பாலியல் வன்முறை சம்மந்தமாக நீதிபதி வர்மா கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷன் பலாத்காரத்தைத் தடுக்க சில பரிந்துரைகளை செய்தது. ஆனால் அதில் சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு மத்திய அரசு அவசர சட்டமொன்றைப் பிறப்பித்தது. மற்ற கட்சிகளையும், நிறுவனங்களையும் கலந்தாலோசிக்காமல் அவசரமாக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தால் அரசின் மீது அதிருப்தி கிளம்பியுள்ளது. இந்த பிரச்சினை, காங்கிரஸ் அரசின் போதாத காலத்தைக் குறிக்கிறது என்று மூத்த அரசியல் விமர்சரான சோ தனது துக்ளக் பத்திரிகையில் வர்ணிக்கிறார். இந்த இக்கட்டான நேரத்தில் ஹெலிகாப்டர் ஊழல் வெடித்துள்ளது காங்கிரசை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் பெரும் ரகளையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊழல் தொடர்பாக எந்தத் தகவலையும் வெளியிடத் தயார் என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது. இதனால் இத்தாலி தலைநகரமான ரோம் நகரத்தை நோக்கி சி.பி.ஐ. விரைந்துள்ளது. இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் அதை ஏற்க வாய்ப்பில்லை. இந்த விவகாரம் மிக முக்கியமானது என்பதால் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.க. கோருகிறது. இந்த ஊழலில் பா.ஜ.க.வுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறுவதை அந்த கட்சி மறுத்துள்ளது. ஏன் விதிமுறையை மாற்றாமல் ஹெலிகாப்டர்கள் ஏலம் விடப்பட்டன என்று அது கேட்கிறது. இந்த ஊழலில் முன்னாள் விமானப்படைத் தளபதி தியாகியின் குடும்பத்தினர் பெயர் அடிப்படுகிறது. ஆனால் இவர்களுக்குப் பின்னணியில் பெரும்தலைகள் இருக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. தற்போது ஃபோபர்ஸ் வழக்கு நீர்த்துப்போய்விட்டாலும் அதன் காரணமாக காங்கிரஸ் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டதை மறுக்க முடியாது. பெரும்பான்மை பலம் வாய்ந்த காங்கிரஸ் கட்சி, ஃபோபர்ஸ் புகார் காரணமாக பல ஆண்டுகள் சிறுபான்மை ஸ்தானத்துக்குச் சென்றுவிட்டது. இந்த ஹெலிகாப்டர் ஊழலும் அதேபோன்ற விளைவை ஏற்படுத்தினால் மீண்டு வருவதற்கு காங்கிரசுக்கு மேலும் கூடுதலான காலம் தேவைப்படலாம். தற்போதைய சூழலில் காங்கிரசின் எதிர்காலம் இந்த ஊழல் புகாரில் அடங்கியுள்ளது என்றும் சொல்லலாம். சிறிய அளவிலான ஊழல் என்றாலும் ராணுவம் சம்மந்தப்பட்டது என்பதால் இது சீக்கிரமாக அடங்கிவிடாது. தவிர, தொடர் பிரச்சினைகளின் சுமையால் அழுத்தப்பட்டுள்ள காங்கிரஸுக்கு இந்தச் சிறிய சுமையும் முதுகை ஒடிக்கப் போதுமானதாக இருக்கலாம். கழுதையின் முதுகை ஒடித்த ஒற்றை வைக்கோல் (A straw that broke camel's back) என்ற ஆங்கிலப் பழமொழியும் வள்ளுவர் கூறும் மயிலிறகும் இப்போது காங்கிரஸுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.

Tuesday, January 29, 2013

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2014 களம் இங்கே; தளபதிகள் எங்கே?

சுதந்திரப் போராட்ட காலத்தில் அலகாபாத் நகரத்தில் இருந்த தங்களது பூர்வீக வீட்டைத் தங்கள் வாரிசுகளுக்கு எழுதிவைக்காமல் காங்கிரசுக்கு தானம் அளித்த மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு ஆகியோர் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் வருங்காலத்தில் தங்களது சந்ததியினர்தான் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு வர முடியும், நாட்டுக்கே பிரதமராகவும் வர முடியும் என்ற சூழ்நிலை உருவாகும் என்பதை அவர்கள் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார்கள். ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரன் ராகுல் காந்தி, ஜனவரி 19ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டபோது காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஆனால் மக்கள் யாரும் ஆச்சரியம் அடையவில்லை. இது வழக்கமான ஒன்றுதான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. இன்றைய நிலையில் ராகுல் காந்தியை விட்டால் தலைவராக காங்கிரஸில் வேறு ஆளில்லை என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அதே நேரத்தில் அவரது செயல்பாடுகள் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துமா என்பதும் நாட்டின் அடுத்த பிரதமராக அவர் தகுதியானவர்தானா என்பதும் கேள்விக்குரியவை என்பதிலும் சந்தேகம் இல்லை. இதோடு மற்றொரு கேள்வியும் எழுப்பப்படுகிறது. அது தேர்தல் களத்தில் ராகுலை எதிர்த்து நிற்கப்போகிறவர் யார் என்பதைப் பற்றியது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது. காங்கிரசின் எதிர் முகாமான பா.ஜ.க.வில் பிரதமர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சமீபத்தில் பா.ஜ.க.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்நாத் சிங், “பா.ஜ.க.வில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை. பிரதமர்பதவிக்கான வேட்பாளரை உரிய நேரத்தில் பா.ஜ.க. நாடாளுமன்றக் குழு தீர்மானிக்கும்” என்று அறிவித்திருக்கிறார். தற்போதைக்கு அவர்கள் பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்காவிட்டாலும் அந்த வேட்பாளர் யாராக இருக்கக் கூடும் என்பதற்கான சமிக்ஞைகள் கிடைக்காமல் இல்லை. இன்றைய தேதியில் அரசியல் களத்தில் அதிக விமர்சனங்களையும் அதிகப் பாராட்டுக்களையும் ஒரு சேரக் குவித்துவரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நோக்கி ஆனைவரது கவனமும் திரும்பியுள்ளது. ராஜ்நாத் சிங் தலைவரானதும் அவரைச் சந்திப்பதற்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்றார். அப்போது நிருபர்களை சந்தித்த மோடி, “அடுத்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் வியூகங்கள் குறித்து ஆலோசனை செய்ய வந்தேன்” என்றார். இந்தக் கூற்று ஊகங்களைப் பல மடங்கு பெருக்கியுள்ளது. ஏற்கனவே தலைவராக இருந்த நிதின் கட்காரிக்கும் மோடிக்கும் ஒத்துவராது என்பது ஊரறிந்த சேதி. எனவே புதிய தலைவர் பொறுப்பேற்றிருப்பதே மோடிக்குக் கிடைத்த வெற்றி என்று பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிய தலைவரை மோடி சந்தித்துத் தேர்தல் குறித்துப் பேசினால் பரபரப்பு எழத்தானே செய்யும்? அது போதாதென்று கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான யஷ்வந்த் சின்ஹாவும் மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று பகிரங்கமாகப் பேசியிருக்கிறார். இத்தகைய குரல் பகிரங்கமாக எழுவது இதுவே முதல் முறை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் ராகுலுக்கு இருக்கும் முழுமையான ஆதரவு, மோடிக்கு தே.ஜ. கூட்டணியில் மட்டுமல்ல. அவர் சார்ந்துள்ள பா.ஜ.க.விலேயே இல்லை என்பது கவனத்துக்குரிய விஷயம். பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்தான் பிரதமர் வேட்பாளர் என்பதை ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் நரேந்திர மோடியை ஏற்பது சந்தேகம்தான். ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பீகார் முதல்வர் நீதீஷ் குமார் ஏற்கனவே மோடியுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார். மோடி-ராஜ்நாத் சிங் சந்திப்பால் அதிர்ச்சியடைந்த அந்த கட்சித் தலைவர் சரத்யாதவ் தே.ஜ. கூட்டணி ஒருங்கிணைப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளரை உடனடியாக பா.ஜ.க. தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது. பா.ஜ.க.விலும் மோடிக்கு எதிர்ப்பு இருக்கிறது. பா.ஜ.க. தலைவராக நிதின் கட்காரி இருந்த சமயத்தில் அவருக்கும் மோடிக்கும் சரியான நட்புறவு இல்லை என்பது ஊரறிந்த ரகசியம். மோடியின் பிரதான எதிரியாகக் கருதப்படும் சஞ்சய் ஜோஷிக்கு கட்காரி முக்கியத்துவம் தந்தது இருவருக்குள்ளும் கோபத்தை கிளப்பிவிட்டது. இரண்டாவது முறை தலைவராக கட்காரிக்கு ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆதரவு இருந்தபோதும் அத்வானியின் கடும் எதிர்ப்பின் காரணமாக, கட்காரிக்கு முன்பு இருந்த ராஜ்நாத் சிங் மீண்டும் தலைவராக வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. கட்காரியின் எதிரியாக அறியப்பட்ட மோடி இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளார். ராஜ்நாத் தலைவராக வந்ததும் உடனடியாக ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை மோடி வெளிப்படுத்தினார். மோடிக்குக் கட்சியில் உள்ள போட்டிகளை அவர் சமாளித்தாக வேண்டும். பிரதமர் வேட்பாளராக வருவதற்கு முன்னால் அவர் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோரின் போட்டியை மோடி எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மூன்றாவது முறையாக குஜராத் தேர்தலில் வென்ற நிலையில் சூழலில் மோடிக்குப் பெரிய அளவில் எதிர்ப்பு அலை இல்லை என்பதால் அவர் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படுவது சாத்தியம் என்ற நிலை உருவாகியுள்ளது. அவர் வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்சத்தில் ராகுல் காந்திக்கு வலுவான போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடிக்கு அடுத்ததாக சுஷ்மா ஸ்வராஜ் பெயரே பிரதமர் பதவிக்கு அடிப்படுகிறது. ஆரம்பம் முதலே மோடிக்கு கட்சிக்குள் வலுவான போட்டி சுஷ்மாதான் என்ற கருத்து நிலவுகிறது. சுஷ்மாவுக்கு மோடி அளவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்றாலும் கூட்டணிக் கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே அவரது கடைசி காலத்தில் சுஷ்மா ஸ்வராஜ்தான் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். தற்போதும் சிவசேனா சுஷ்மாவையே பிரதமராக அறிவிக்க வேண்டும் என்று விரும்புகிறது. யார் பிரதமராக வர வேண்டும் என்பதில் ஐக்கிய ஜனதா தளம் இதுவரை சொல்லாவிட்டாலும் மோடியின் மீதான வெறுப்பின் காரணமாக சுஷ்மாவை ஆதரிக்கும் வாய்ப்புள்ளது. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு முன்னால் இவர்கள் அனைவரையும் பா.ஜ.க. சரிக்கட்ட வேண்டும். மேலும் அந்த கட்சியில் பிரதமர் வேட்பாளருக்கு பல பெயர்கள் அடிபடலாம். அவர்கள் ஒருவரை ஒருவர் கவிழ்க்க நினைப்பது ஆரோக்கியமானதல்ல. இவற்றை பா.ஜ.க. தலைமை தாண்டி வர வேண்டும். அப்போதுதான் மோடி வேட்பாளராக நின்றாலும் சரி, மற்றவர்களில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் சரி, அவர்களுக்குக் கிடைக்கும் மக்களின் ஆதரவை வாக்குகளாக மாற்ற முடியும். இதுவரை இந்த போட்டி நேரடியாக அறிவிக்கப்படாவிட்டாலும் மோடி – ராகுல் ஆகியோரது செயல்பாடுகள் அவர்கள் இருவரது போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றன. இருவரும் ஒருவரையொருவர் எதிரியை எதிர்கொள்ளும் விதமாக தங்களை தயார் செய்து வருகிறார்கள். ஒருவர் மீது மற்றவர் வலுவான புகாரை வீசுவதில் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபித்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே மோடியின் மீதும், குஜராத் மீதும் காங்கிரஸ் தொடர்ந்து அம்பெய்தி வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக குஜராத் மக்கள் மோடியை வெற்றிபெற வைத்திருப்பது காங்கிரஸ் அரசை உறுத்துகிறது. ஏதாவது ஒரு குற்றச்சாட்டை மோடியின் மீது வைத்துவருகிறது. 2002இல் நடந்த குஜராத் கலவரத்தில் மோடியின் மீதான களங்கம் இன்னும் மறையவில்லை. அவரது ஆட்சியின் செயல்பாடுகள் காரணமாக குஜராத் முஸ்லிம்கள் அவரை மன்னித்தாலும், மற்ற மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் அவரை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெரியவில்லை. அந்த கலவரத்தின் வழக்குகள் மோடியின் மீது குற்றஞ்சாட்டுவது அவரது வெற்றிவாய்ப்பை பாதிக்கக்கூடும். அதே நேரத்தில் மோடியின் நிர்வாகம் அவருக்குக் கைக்கொடுக்கிறது. மோடியைத் திட்டுபவர்கள்கூட அவரது நிர்வாகத்தைப் பாராட்டுகிறார்கள். டாடா போன்ற பெரிய தொழிலதிபர்களும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற பிரபலங்களும் மோடியைப் பாராட்டுகிறார்கள். குஜராத்தில் பல தொழிலதிபர்கள் முதலீடுசெய்ய முன்வருகிறார்கள். பல்வேறு வெளிநாட்டுத் தூதர்கள் மோடியைச் சந்திக்கிறார்கள். குஜராத் கலவரம் காரணமாக மோடிக்கு விசா வழங்க மறுத்த இங்கிலாந்து அரசு, இப்போது அவருக்கு பச்சைக்கொடி காட்டுகிறது. இவையெல்லாம் அவரது பலத்தை அதிகரிக்க வைக்கிறது. மோடியின் வளர்ச்சியை காங்கிரஸ் பொறாமையோடு கவனித்து வருகிறது. குஜராத்தில் முதலீடு செய்ய முன்வரும் தொழிலதிபர்களின் மீது வருமான வரி ரெய்டு நடக்கிறது. சோனியாவையும் ராகுலையும் மோடி விடுவதாக இல்லை. சோனியா காந்தியின் மருத்துவ செலவுக்காக மத்திய அரசு 1750 கோடி ரூபாயை ஏன் செலவு செய்தது என்று மோடி கேள்வி எழுப்பினார். தனிப்பட்ட மருத்துவச் செலவுகளை கேள்வி கேட்பதா என்று காங்கிரசும் பதிலுக்குப் பாய்ந்தது. குஜராத்தை காங்கிரஸ் புறக்கணிப்பதாக மோடி மக்களிடம் முறையிட்டார். குஜராத் தேர்தல் சமயத்தில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்கள். ஆனால் கடைசியில் மோடியே ஜெயித்தார். ராகுல் காந்தியின் வளர்ச்சியையும் பார்ப்போம். அவர் காங்கிரசுக்கு அடியெடுத்து வைத்தே பத்து ஆண்டுகள்தான் ஆகின்றன. காங்கிரசின் பொதுச் செயலாளர் பதவிக்கு அவர் வந்ததற்கு வாரிசு அரசியலே காரணம் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் அவர் அத்துடன் திருப்தியடைந்து விடவில்லை. தான் பதவிக்கு வந்ததற்கு பரம்பரை காரணம் இருந்தாலும் சாதாரண மக்கள் கட்சி பதவிக்கு வரவேண்டும் என்று அவர் விரும்பினார். முதற்கட்டமாக அவர் பொறுப்பெடுத்த இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் ஆகியவற்றில் தேர்தல் முறையை ஏற்படுத்தினார். அதனால் பல இடங்களில் சாதாரண தொண்டர்களும் கட்சி பதவிக்கு வந்தார்கள். அதனால் சில மூத்த தலைவர்களின் பொறாமைக் கண்கள் ராகுல் மீது விழவே செய்தன. நாட்டின் முதுகெலும்பு கிராமப்புறத்தில்தான் உள்ளது என்ற காந்தியின் சித்தாந்தத்தில் நம்பிக்கை இருப்பதாக ராகுல் கூறினார். அதனால் கிராமங்களில் உள்ள சாதாரண மக்களின் வீடுகளில் தங்கிவருகிறார். ராகுலின் அணுகுமுறை காரணமாக தேர்தல்களில் சாதகங்களும், பாதகங்களும் சம அளவிலேயே உள்ளன. நாட்டின் பெரிய மாநிலமான உ.பி.யில் அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தால் கடந்த மக்களவைத் தேர்தலில் அந்த மாநிலத்தில் வெகுநாட்களுக்குப் பிறகு காங்கிரஸ் 22 இடங்களைப் பிடித்தது. ஆனால் அவர் தொடர்ந்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டபோதும் அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் 27 இடங்களே கிடைத்தன. பீகாரில் 7 சட்டமன்ற இடங்களே கிடைத்தன. குஜராத்திலும் ராகுல் வசீகரம் எடுபடவில்லை. தலைமைப் பண்புகள் ராகுல் காந்தியின் ரத்தத்திலேயே ஊறியிருக்கும் என்று நினைக்கும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள். நேரு குடும்பப் பாசம் இந்திய மக்களிடம் இன்றும் நீடிக்கிறது. மாற்றுத் தலைவர்கள் காங்கிரஸில் தலையெடுக்காத்து இதற்கு ஒரு முக்கியக் காரணம். அவரது வயதும் கூடுதல் பலம். ஆனால் அவரது பார்வையால் நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் பலமாகவே கேட்கிறது. விவசாயிகளின் வீடுகளில் அவர் தங்க ஆரம்பித்ததும், கடன் தொல்லை, விவசாயத்தில் தோய்வு ஆகியவை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளத் தொடங்கியதும் ஒரே நேரத்தில் நடந்தன. மக்கள் பிரச்சினையை அவரால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. தேசிய நதி நீர் இணைப்பை பல சமூக நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால் ராகுல் அந்த திட்டத்தைத் தீவிரமாக எதிர்க்கிறார். சட்டீஸ்கர் மாநிலத்தில் ஆதிவாசிகளோடு இணைந்து நில கையகப்படுத்துதலுக்கு எதிராக போராட்டம் நடத்திய ராகுல் தற்போது அவர்களுடன் இல்லை. நரேந்திர மோடிக்கும், ராகுல் காந்திக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. ஒருவர் அரச பரம்பரையில் வந்தவர். மற்றவர் சாதாரண நிலையில் இருந்து வளர்ந்தவர். ஒருவர் மதசார்ப்பற்ற அரசியல் பேசுகிறார். மற்றவர் மதத்தை வைத்து அரசியல் நடத்துகிறார். அரசியல் அனுபவத்தில் மோடி மிகவும் மூத்தவர். ராகுல் கற்றுக்குட்டி. சமீபத்தில் இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில், மோடி பிரதமராக சுமார் 50 சதவீத ஆதரவும், ராகுல் பிரதமராக சுமார் 40 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளன. ஆனால் மக்களவைத் தேர்தல் சமயத்தில் ஏற்படும் கூட்டணிகள், தலைவர்களின் பிரச்சாரம் ஆகியவற்றைப் பொறுத்தே வெற்றி, தோல்விகள் நிர்ணயிக்கப்படுகின்றன. முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை தற்போது சொல்ல முடியாது. ஆனால் ’யார் அடுத்த பிரதமர்?’ என்ற கேள்விக்கு முன்னால் யார் அடுத்த பிரதமருக்கான வேட்பாளர் என்னும் கேள்விக்கு பதில் கான வேண்டியுள்ளது. அந்த பதிலிலேயே முதல் கேள்விக்கான பதிலும் அடங்கியிருக்கலாம். *

Wednesday, December 5, 2012

புனிதப் புரட்டு - பால.கௌதமன்

முதல் இந்தியர் புனிதர் ஆகிறார் ! மண்ணின் மைந்தர் புனிதராகிறார் ! கன்னியாகுமரி மாவட்டத்தில் அமர்க்களப் பிரச்சாரம்! தேவசகாயம் பிள்ளை என்பவரை “புனிதர்” ஆக்குவதற்கான முதல் படியாக, அவரை “உயிர்த்தியாகி”” என்று போப்பாண்டவர் 2012-ம் வருடம் ஜூன் 28 அன்று அறிவித்தார். முன்னணிப் பத்திரிகைகள் இந்தச் செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டதுடன் ஏதோ இந்த அறிவிப்பால் இந்திய பூமியே புனிதப்பட்டு விட்டதாக எழுதத் தொடங்கிவிட்டன. இந்தப் புனிதப் பட்டமளிப்பு விழாவின் நோக்கம் என்ன? இந்த வரலாறு உண்மைதானா? யார் “உயிர்த்தியாகி”” ஆகிறார்? பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் ஐரோப்பாவில் சாம்ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கும் போப்பாண்டவருக்காக, மதமாற்றத்தில் ஈடுபட்டு நாட்டைப் பிடிக்கும் படையில் சேர்ந்து பின்னர் மரணமடைந்த ஓர் போர் வீரன் தான் இந்த உயிர்த்தியாகி என்கிறார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதிரி டெர்டுலியன். "உயிர்த்தியாகத்தை மனமுவந்து புரியும் தியாகிகளின் தியாகமே, மற்ற மதத்தவர் கிறிஸ்துவராக மதம் மாறத் தூண்டுதலாக அமைகிறது." என்று சொல்லும் அவர், “உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் ரத்தம்தான், சர்ச்சின் விதையாகும் என்கிறார் [Source: http://en.wikipedia.org/wiki/Christian_martyrs ) இந்தப் பட்டமளிப்பின் நோக்கம் மதமாற்றமே! இதை மீண்டும் உறுதிப் படுத்துகிறார் போப் இரண்டாம் ஜான் பால். உறுதிப் படுத்துவதுடன் நின்று விடவில்லை, இந்த உயிர்த்தியாகிகளே வாட்டிகனின் நாடு பிடிக்கும் போர் வீரர்கள் என்று பெருமைப் படுத்தவும் செய்கிறார். முதல் ஆயிரம் ஆண்டுகளின் சர்ச்சானது, உயிர்த்தியாகம் புரிந்த தியாகிகளின் உதிரத்தால் உருவானது” என்றும், உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் பாரம்பரியத்தை மறந்து விடக் கூடாது என்றும் சொல்லும் போப் ஜான் பால் II, இந்தப் பெயர் அறியாத, யாரெனத் தெரியாத படை வீரர்களுக்கான அங்கீகாரத்தை, இறைப் பணியாகவே ஏற்று நடத்த ஊக்குவிக்கிறார். (source: http://www.martyrdevasahayam.org/RELEVANCE-OF-MARTYRDOM.php retrieved on 30.11.2012 ) இதில் கவனிக்க வேண்டிய வாசகம் என்னவென்றால் "முகம் தெரியாத படைவீரர்கள்" ("unknown soldiers" ) என்பதுதான். இந்த ”வீரர்கள்” இருப்பது எந்தப் படை? இது யாருக்காகப் போரிடும் படை? எந்த நாட்டைப் பிடிக்கிறது? எந்தப் பண்பாட்டை இது அழிக்கிறது? இதன் நோக்கம்தான் என்ன? மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கும் மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கும் ஒருவனை உயர்த்துவது சமயம். இந்த ஆன்ம நெறித் தத்துவத்தை ஏற்றால் அது சமயம். ஆனால், சமயம் என்ற போர்வையில் நாடு பிடிக்கும் இந்தக் கூட்டத்தை சமயத்துடன் ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம்? மேலும், முன்பின் அறியாத நாடுகளுக்குச் சென்று, அந்த மண்ணின் மைந்தர்களை ஏமாற்றி, மிரட்டி, கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயலும்போது இந்தப் “படை வீரர்கள்”” தன்மானமுள்ள மண்ணின் மைந்தர்களால் கொல்லப்படுவதுண்டு. அவ்வாறு கொல்லப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களைத்தான் கிறிஸ்தவ நிறுவனங்கள் “உயிர்த்தியாகிகள்”” என்று முன் நிறுத்துகின்றன. இதே போப் ஜான் பால் II, முதலாம் ஆயிரம் ஆண்டில் ஐரோப்பாவை மாற்றிவிட்டோம். இரண்டாவது ஆயிரமாண்டில் அமெரிக்காவை மாற்றினோம். நடக்கும் ஆயிரமாண்டில் ஆசியாவை மதம் மாற்றுவோம் என்று கொக்கரித்தது நினைவுகூரத் தக்கது. இந்த ஆன்ம அறுவடைக்காக கத்தோலிக்க சர்ச்சுக்கு டெர்டுலியன் பாதிரியார் சொன்னதுபோல், உயிர்த்தியாகிகள் தேவைப்படுகின்றனர். அதற்காக, கேரளா, தமிழகம், வட இலங்கை போன்ற பகுதிகளில் உயிர்த்தியாகிகள் உள்ளனரா என்று தோண்டியெடுக்கும் பணியில் சர்ச் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதனை கோட்டார் மறைமாவட்டத்தினால் நிர்வகிக்கப்படும் வலைதளத்தில் கிறிஸ்துவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். "இந்த உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் நினைவுகளை மறவாதிருக்க, அவர்களின் சாகஸத்துக்கான சான்றுகளையும், தியாகம் குறித்த தரவுகளையும் பதிவுகளாக்குவதே உகந்த வழி என்று அவர் (போப் ஜான் பால் II ) கருதுகிறார். ” (source: http://www.martyrdevasahayam.org/RELEVANCE-OF-MARTYRDOM.php retreived on 30.11.2012) இந்தத் தோண்டுதலில் சிக்கியவர் தான் வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை. கிறிஸ்துவத் திருச்சபைகளுக்குச் சொந்தமான வலைதளத்தில் தேவசகாயம் பிள்ளையின் “வரலாறு”” பின்வருமாறு சொல்லப்படுகிறது: தேவசகாயம் பிள்ளை 1712-ம் ஆண்டு உயர் ஜாதியான நாயர் சமுதாயத்தில் நீலகண்டப் பிள்ளை என்ற பெயரில் பிறந்தார். பின்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் பணியாற்றினார். அப்போது மார்த்தாண்டவர்ம ராஜாவின் தளபதியான டச்சுக்காரர் டிலனாயுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் விளைவாக அவர் கிறிஸ்தவத்தின் பால் ஈர்க்கப்பட்டார். 1745ம் ஆண்டு வடக்கன்குளம் சர்ச்சில் பௌட்டாரி என்ற பாதிரியாரால் கிறிஸ்துவராக மதம் மாற்றப்பட்டார். கிறிஸ்துவராக மதம் மாறியதும் தேவசகாயம் பிள்ளை என்ற பெயரை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர், ஜாதி வேறுபாடுகளைக் கடந்து, அனைத்து தாழ்த்தப்பட்ட ஜாதியினருடனும் நெருங்கிப் பழகி, அந்த மக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றினார். இதனைப் பொறுத்துக் கொள்ளாத பிராமணர், நாயர் போன்ற ஆதிக்க சாதியினர் மன்னரைத் தூண்டி விட்டு, தேவசகாயம் பிள்ளை மீது அடுக்கடுக்காகப் பல புகார்களைச் சுமத்தினர். இதன் விளைவாக தேவசகாயம் பிள்ளை 1749, பிப்ரவரி 23ம் தேதி கைது செய்யப்பட்டார். 1749 முதல் 1752 வரை மூன்றாண்டு காலம் தேவசகாயம் பிள்ளை பலவிதமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார். பிறகு, நாகர்கோவில் திருநெல்வேலி சாலையில் உள்ள ஆரல்வாய்மொழிக்கு அருகே காத்தாடி மலையில் மார்த்தாண்டவர்ம ராஜாவின் காவலர்களால் 1752ம் வருடம் ஜனவரி 14ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். (http://www.martyrdevasahayam.org & http://cbci.in/FullNews.aspx?ID=648 ) (Retrieved on 30.11.2012) இந்த வரலற்றை வெளிக்கொணர்வதின் பயன் என்ன? கோட்டார் மறைமாவட்ட வலைதளம் அதை பின் வருமாறு தெளிவு படுத்துகிறது. “கடந்த 259 ஆண்டு காலத்தில், இந்த இறை சேவகர் (தேவசகாயம் பிள்ளை) தமிழ்நாடு, தெற்கு கேரளம், வடக்கு இலங்கை ஆகிய பகுதி மக்களின் நினைவுகளில், வழிபாட்டில், ஆன்மீகத்தில், பிரார்த்தனையில் நீக்கமற நிறைந்திருப்பதன் காரணமாக, அவரை அந்தப் பகுதிகளின் ‘பெயரறியாத, முகம் தெரியாத படைவீரர்களோடு’ சேர்க்க முடியாது. ஆனால், சர்ச்சால் அங்கீகரிக்கப்படாத நிலையிலும், சர்ச்சின் அதிகாரப்பூர்வமான ஏற்பு நிலை இல்லாத சூழலிலும், இத்தகைய பொருள்பொதிந்த நிகழ்வை, சர்ச்சுக்கோ, சமுதாயத்துக்கோ பலனளிக்கும் வகையில் செயல்படுத்த முடியாது.” (source: http://www.martyrdevasahayam.org/RELEVANCE-OF-MARTYRDOM.php retreived on 30.11.2012) "இத்தகைய பொருள்பொதிந்த நிகழ்வை சர்ச்சுக்கோ சமுதாயத்துக்கோ பயனளிக்க” - அப்படி என்றால், தேவசகாயம் சர்ச்சுக்கான ஒரு வியாபாரப் பொருள். இதில் எந்த ஆன்மிக நோக்கமும் இல்லை என்பதை சர்ச்சே தெளிவு படுத்திவிட்டது. எந்தப் பகுதிகளில் இவர் பயன்படுத்தப்படப் போகிறார்? "தமிழ்நாடு,தெற்கு கேரளம்,வடக்கு இலங்கை ஆகிய பகுதி மக்களின் நினைவுகளில்,வழிபாட்டில்,ஆன்மீகத்தில்,பிரார்த்தனையில் நீக்கமற நிறைந்திருப்பதன் காரணமாக" என்கிறபகுதி விளங்கி விட்டது,ஆனால் எப்படி என்று தெரியுமா?இதன் மூலம் எந்த பண்பாட்டு அடையாளத்தை அழிக்கப்போகிறார்கள் என்று தெரியுமா? இதற்கான பதிலை நாகர்கோவிலில் டிசம்பர் 2 , 2012அன்று தேவசகாயம் பிளையை ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று அறிவித்த விழாவில் கிறிஸ்தவர்களே வெளிப்படுத்தியுள்ளனர். தேவசகாயம் பிள்ளை வேதசாட்சி நிலை அடைந்த ஜனவரி14ஆம் நாளை,தேவசகாயம் பிள்ளை திருவிழாவாகக் கோண்டாட,கார்டினல் அமடொ அனுமதி அளித்துள்ளார்.இதில் கவனிக்க வேண்டிய நாள்,ஜனவரி14.பெரும்பாலும் அன்றுதான்,தமிழகம்,வட இலங்கை மற்றும் தெற்கு கேரளத்தில் பொங்கல் பண்டிகை ஆண்டு தோரும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.சபரிமலை மகர ஜோதியும் அன்று தான் தோன்றுகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவ பிஷப்புகளின் கூட்டமைப்பின் (CBCI) வலைதளம்,தேவசகாயம் பிள்ளை ஜனவரி14அல்லது15ல் கொல்லப்பட்டார் என்கிறது(http://cbci.in/FullNews.aspx?ID=648) (Retrieved on 30.11.2012).காரணம்,தை மாதப் பிறப்பு அவ்வப்போது ஜனவரி15ஆம் நாளும் வரும்.இதன் மூலம்,பொங்கல் பண்டிகைக்குள் ஊடுறுவி மதமாற்றம் செய்யும் திட்டம் தெளிவாகிறது. பல கிறிஸ்தவப் பண்டிகைகள்,இவ்வாறு பல நாட்டு உள்ளூர் திருவிழாக்களை பின்பற்றி ஏற்பட்டவை. ஆனால் அந்தத் திருவிழாக்களின் காரணிகளும்,பண்பாட்டு அடையாளங்களும் இந்த கிறிஸ்தவர்களால் அழிக்கப்பட்டது என்பதற்கு வரலாறே ஒரு சாட்சி.இந்த வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால்,இந்த தேவசகாயம் பிள்ளை திருவிழா,பொங்கலின் பாரம்பரியத்தை அழிக்க வந்த சூழ்ச்சி என தெளிவாகிறது. மதமாற்றம் மட்டுமல்லாமல் இதில் புதைந்திருக்கும் அரசியல் நோக்கத்தையும் ஒளிவு மரைவில்லாமல் வெளிப்படையாக்குகிறது கோட்டார் மறை மாவட்ட இணையதளம். அதில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது: லூர்தில் ஜான் பால் II நிகழ்த்திய உரையின் போது, அவர் உலகெங்கும் பரவி வரும் புதிய வகை சமய ரீதியான கொடுமை குறித்துப் பேசினார். இது இந்தியாவில் இன்று உண்மையாக இருக்கிறது. ஹிந்து அடிப்படைவாதிகளால் இன்று, கிறிஸ்தவர்களுக்கு எதிரான சூழல் நிலவுகிறது, இவர்களை சில அரசியல் அமைப்புகள் தங்கள் அரசியல் லாபங்களுக்காக முழுமையாக ஆதரிக்கிறார்கள். இந்திய சர்ச் ஏற்கெனவே “கொடுமையை எதிர்நோக்கும் காலத்தை” சந்திப்பதைப் போல இருக்கிறது.” (Source: http://www.martyrdevasahayam.org/RELEVANCE-OF-MARTYRDOM.php retreived on 30.11.2012) அரசியலுடன் நின்றுவிடாமல், கிறிஸ்துவம் புகும் நாடுகளின் மண்ணின் வாசனைக்கேற்ப பல அவதாரங்களை எடுத்து, உள்நாட்டு மக்களை மதம் மாற்றி, அவர்கள் பண்பாட்டில் இருந்து அவர்களைப் பிரித்து, சர்ச்சின் ஆதிக்கத்தின் கீழ் அவர்களை கொண்டு வரும் சூழ்ச்சியானது இந்த தேவசகாயம் பிள்ளை உயிர்த்தியாக பட்டமளிப்பின் மூலம் நிறைவேற்றப்படும் என்று கோட்டார் மறை மாவட்ட வலைதளம் தன் இயல்பை பின்வருமாறு வெளிக்காட்டுகிறது: இந்த உயிர்த்தியாகத்தை இன்று பொருள் உள்ளதாக ஆக்கும் வேறு ஒரு விஷயம் என்னவென்றால், Ad Gentes சர்ச்சின் நோக்கத்தில் பாமர மக்கள் ஆற்ற வேண்டிய பங்குதான்! பாமர மக்கள் சர்ச்சை சார்ந்தவர்கள்” மட்டுமல்லர், உண்மையிலேயே, அவர்கள்தான் சர்ச்சும்கூட”. எனவேதான் பாமர மக்களின் கலாசாரங்களை உள்வாங்கிக் கொள்வது பற்றிப் பேசுவது, இயல்பான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால், உலகில், சர்ச்சின் இயல்பே மதத்தைப் பரப்புவது ! அதே போல சர்ச்சின் மத விரிவாக்கம் என்பது, சர்ச்சின் இயல்பான ஒன்றாகவே வெளிப்படுகிறது”. (source: http://www.martyrdevasahayam.org/RELEVANCE-OF-MARTYRDOM.php retreived on 30.11.2012) இப்படி மதமாற்ற நோக்கத்துக்காகவே ஏற்படுத்தப்பட்ட இந்தப் பட்டமளிப்புகள் எல்லாம் ஏதோ ஒரு உண்மையான வரலாற்றின் அடிப்படையில்தான் உருவானது என்று பெருவாரியான அறிஞர்கள் நினைக்கக் கூடும். அதிலும் மண்ணின் மைந்தர், பாமரன், பாட்டாளி என்ற சொற்களையும் சேர்த்துவிட்டால், அந்தந்த ஊர்காரர்கள் பரவசமடைந்து விடுவார்கள்; உண்மையை அறிய நாட்டம் கொள்ள மாட்டார்கள் என்பது சர்ச்சுக்கு நன்றாகவே தெரிந்த விஷயம். ஆனால், ஆராய்ந்து பார்க்கும்போது இந்த மண்ணின் மைந்தரின் கதை உண்மைக்குப் புறம்பானது என்பது நமக்குத் தெரியவருகிறது. புகழ்பெற்ற கேரள வரலாற்று ஆசிரியரான திரு. ஏ.ஸ்ரீதர மேனன் 20.1.2004 அன்று பயனிர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "மரண தண்டனையை விட்டுவிடுங்கள், திருவிதாங்கூர் வரலாற்றில் மதமாற்றத்தின் பெயரால் ஒரு சிறு தண்டனை வழங்கப்பட்டதாகக்கூட பதிவு செய்யப்படவில்லை. இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு கற்பனைக் கதையே." என்று ஆதார பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR) தலைவராக இருந்த திரு.எம்.ஜி.எஸ்.நாராயணன் அவர்கள், நீலகண்டம்பிள்ளை என்ற பெயரிலோ தேவசகாயம்பிள்ளை என்ற பெயரிலோ மார்த்தாண்டவர்ம மகாராஜா காலத்தில் ஒரு ராணுவத் தளபதி இருந்ததில்லை என்று வாதிடுகிறார். திருவிதாங்கூர் வரலாற்றை எழுதிய திரு.நாகம் ஐயா, இந்தக் கதை நம்பும்படியாக இல்லை என்றும், மதம் மாறியவர்கள் அவர்கள் முன்னோர்களை குருமார்களாக சித்திரிக்கும் பழக்கம் நம் நாட்டில் வழக்கம்; அதனடிப்படையில்தான் இந்தக் கதை புனையப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். (Travancore Manual Vol II page 129-130, M.Nagam Aiya) இந்தக் கதையில் கிறிஸ்துவர்கள் திருவிதாங்கூர் மன்னரால் கொடுமைப்படுத்தப் பட்டார்கள் என்பதை நிலை நிறுத்த கற்பனையாளர்கள் பெருமுயற்சி எடுத்துள்ளனர். ஆனால், வரலாற்றுப் பதிவுகள் என்ன சொல்கிறது? மதம் மாறியதற்காக தேவசகாயம்பிள்ளை மார்த்தாண்ட வர்ம ராஜாவால் கொல்லப்பட்டார் என்று குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் மார்த்தாண்டவர்ம ராஜா, வரப்புழா சர்ச்சுக்கு வரியில்லா நிலம் கொடுத்து உதவினார். (Travancore Manual, Vol-I page 16, T.K.Veluppillai) டச்சுக்காரர் திலனாயால் கிறிஸ்துவத்தின்பால் தேவசகாயம்பிள்ளை ஈர்க்கப்பட்டார் என்று கிறிஸ்துவர்கள் கதை சொல்லுகின்றனர் . அந்த டச்சுக்காரர் திலனாய்க்காக கார்த்திகைத் திருநாள் மகராஜா உதயகிரிக் கோட்டை சர்ச்சைக் கட்டினார் என்றும் அந்த சர்ச் பாதிரிக்கு 100 பணம் மாதச் சம்பளமாகக் கொடுத்தார் என்றும் திரு. டி.கே.வேலுப்பிள்ளை திருவிதாங்கூர் வரலாற்றில் குறிப்பிடுகிறார். (Travancore Manual, Vol-I page 16, T.K.Veluppillai) இந்த மன்னர்கள் மதத் துவேஷம் கொண்டவர்களாக இருந்திருந்தால் இந்து ஆலயங்களை நிர்வகிக்கும் தேவஸ்வம் போர்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஐரோப்பிய கிறிஸ்துவர்களான மன்றோ அவர்களுக்குக் கொடுத்திருப்பார்களா? நீலகண்டப் பிள்ளை மதமாறியதாகச் சொல்லப்பட்ட காலகட்டத்தில் கத்தோலிக்கர்களும்,பிரட்ஸ்டண்ட்களும் ஐரோப்பாவிலும்,பிற பகுதிகளிலும் எப்படி மோதிக்கொண்டனர் என்பது வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். இந்த டச்சுக்காரர்கள் கொச்சி கோட்டையை கைப்பற்றியவுடன், வாஸ்கோடகாமாவை அடக்கம் செய்திருந்த “புனித அண்டோனியோ கத்தோலிக்க சர்ச்சை” “புனித ஃபிரான்ஸிஸ் பிராடஸ்டண்ட் சர்ச்” என்று மாற்றினர்.இன்றும் அந்த சர்ச் பிராட்ஸ்டண்ட் பிரிவான தென் இந்தியத் திருச்சபையின்(CSI)கீழ் உள்ளது.டச்சுக்காரரான டிலனாய் ஒரு பிராடஸ்டண்ட் கிறிஸ்தவர்.இவரது உதயகிரி சர்ச்,பிராடஸ்டண்ட் சர்ச்சாகத் தான் நிர்வகிக்கப்பட்டு வந்தது.மேலும்,டச்சுக்காரக்கள் அனைவரும் மதமாற்றத்தை அங்கீகரிக்கும் உரிமையையும் பெற்றிருந்தனர்.இப்படியிருக்க,நீலகண்டப் பிள்ளையை டிலனாய் ஏன் ஞானஸ்நானத்திற்காக கத்தோலிக்க சபைக்கு அனுப்ப வேண்டும்?அதுவும் அரசரின் தளபதி!தளபதியால் மதமாற்றப்பட்டால் லாபம் உண்டு.அதிகாரமில்லாத சர்ச்சால் மாற்றப்பட்டால் உயர் ஜாதி நீலகண்டப் பிள்ளைக்கு என்ன லாபம்? எனவே இந்த “தேவசகாயம் பிள்ளை” கதையைக் கட்டியவர்களுக்குதிருவிதாங்கூர் அரசியல்-சமூக சூழலும் தெரியாது,ஐரோப்பிய சூழலும் தெரியாது என்பது தெளிவாகிறது. திருவிதாங்கூர் படையில் மார்த்தாண்ட வர்ம ராஜா காலத்தில் ஈழவர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இருந்தனர் என்று கர்னல் வில்க்ஸ் தெரிவித்ததை திரு. வேலுப்பிள்ளை மேற்கோள் காட்டுகிறார். (Travancore Manual, Vol-IV page 122, T.K.Veluppillai) இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இந்துக்களுக்குச் சாதகமாகத்தான் எழுதுவார்கள், அதனால் இதை ஏற்க முடியாது, என்று கிறிஸ்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவ சர்ச் பாதிரிகள் சொல்வதை மட்டும் வரலாறாக நாம் ஏற்க வேண்டுமாம்! இதுதானே கிறிஸ்துவர்களின் நியாயம். சரி... அவர்கள் நியாயத்துக்கே வருவோம். ஜூலை 2 , 1774ல் போப் கிளமண்ட் XIV திருவிதாங்கூர் ராஜாவுக்கு எழுதிய கடிதத்தில், "திருவிதாங்கூரில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபையின் அங்கத்தினர் மீது மன்னர் செலுத்திவரும் பரிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். (Travancore Manual vol-I page 387, M.Nagam Aiya), போப் கிளமண்ட் XIV பொய் சொல்கிறாரா? போப் ஜான்பால் II பொய் சொல்கிறாரா? கோட்டார் மறைமாவட்டம் பொய் சொல்கிறதா? அல்லது தற்போதைய போப் பெனடிக்ட் பொய் சொல்கிறாரா? தேவசகாயம் பிள்ளையை கிறிஸ்துவத்தின் பால் ஈர்த்த டிலனாய்க்காக, அஞ்சங்கோ தளபதியை எதிர்த்து மார்த்தாண்ட வர்மா மகாராஜா போர் தொடுத்தார்... என்ன காரணம் தெரியுமா? அஞ்சங்கோ தளபதியின் மகள் மீது டிலனாய் ஆசைப்பட்டு விட்டாராம். (Travancore Manual Vol II page 130, M.Nagam Aiya) இப்படி உற்ற நண்பனாக இருந்த டிலனாயின் நண்பரை மதமாற்றக் குற்றத்துக்காக மார்த்தாண்ட வர்ம ராஜா கைது செய்து கொடுமைப் படுத்தி சுட்டுக் கொன்றாராம்.. இதை நாம் நம்ப வேண்டுமாம்! இன்னும் சொல்லப்போனால் அந்த கிறிஸ்துவக் கதையில் டிலனாயுடன் தேவசகாயம் பிள்ளை நெருங்கிப் பழகுவதை மகாராஜாவின் அமைச்சரான ராமய்யன் தளவாய் விரும்பவில்லை என்றும், தேவசகாயம் பிள்ளை மீது ராமய்யன் தளவாயின் கோபத்துக்கு இது ஒரு காரணம் என்றும், அதனால் தான் ராமய்யன் தளவாயின் பழிவாங்கும் வெறி அதிகமானது என்றும் கிறிஸ்துவர்கள் தெருக்கூத்து நாடகத்தில் பாடி வருகிறார்கள். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மரண தண்டனை பொதுவாக ராஜதுரோகக் குற்றம், கொலை, வழிப்பறி போன்ற குற்றங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. (Travancore Manual, Vol-IV page 77, T.K.Veluppillai). இந்த அடிப்படையில் திரு.நாகம் ஐயா அவர்களின் திருவிதாங்கூர் சரித்திரத்தை நாம் கவனிக்க வேண்டும். நீலகண்டப் பிள்ளையின் மீது அரசு ஆவணங்களை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில், தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம். இது, அவர் மதம் மாறிய சில ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நடந்திருக்க வேண்டும். இந்த தண்டனைக்கும் மதம் மாற்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. (Travancore Manual Vol-II page 130, M.Nagam Aiya) இந்தக் குற்றச்சாட்டு மதமாற்றத்துடன் நின்றுவிட்டால் இத்துடன் நாமும் நின்றுவிடலாம். “கீழ் ஜாதியினருடன் அவர் பழகியதன் காரணமாகத்தான் மேல் ஜாதியினர் அவர் மீது வெறுப்புற்றனர், அதனால் இவர் கொல்லப்பட்டார்”” என்று ஒரு ஜாதி அரசியலும் இந்தக் கதையில் இடம்பெற்றுள்ளது. ஜாதி பேசி ஹிந்து சமுதாயத்தைப் பிரித்து மதம் மாற்றும் தொடர் சூழ்ச்சியை இந்தக் கதையிலும் சர்ச்சு லாகவமாகப் புகுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஏற்றார்போல் ஒரு போலியான ஆதாரம்கூட சர்ச்சால் காட்டப்படவில்லை. தீண்டாமை ஒழிப்பில் கத்தோலிக்க சர்ச்சின் சேவையை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் போப் கிரிகோரிXV யின் புல்லா ரொமனே செடிஸ் அன்டிஸ்டிடிஸ் (Bulla Romanae Sedis Antistitis) என்ற ஜனவரி 31, 1623 தேதியிட்ட ஆணையில் இந்திய சர்ச்சுகளில் ஜாதீய சம்பிரதாயங்களுக்கு அனுமதி வழங்கினார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். (ref: http://indiainteracts.wordpress.com/tag/christian-caste-system/ ) இது நீலகண்டப் பிள்ளை மதம் மாறுவதற்கு சுமார் 120 ஆண்டுகள் முன்புதான். இதுவரை இந்த ஆணை திரும்பப் பெறவோ மாற்றப்படவோ இல்லை. இதனால் இந்திய சர்சுகளில் இன்றும் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. ஆட்டுக்காக ஓநாய் அழும் கதையைப் பார்த்தீர்களா? ஏன், இந்த தேவசகாயம் பிள்ளை மதம் மாறியதாக சொல்லப்பட்ட வடக்கன் குளத்திலேயே, வெள்ளாள கிறிஸ்துவர்களும் ஒடுக்கப்பட்ட கிறிஸ்துவர்களும் ஒரே சர்ச்சுக்குச் செல்லமாட்டோம் என்று சொல்லி தனித்தனியாக அமரவில்லையா? ஜாதீய வேறுபாடுகளை ஒழித்துவிட்டோம் என்று மார்தட்டும் கிறிஸ்தவம், தேவசகாயம் பிள்ளையின் சொந்த சர்ச்சிலேயே இந்த நிலைமையை எப்படி அனுமதித்தது? தியாகங்கள் மதிக்கப்படவேண்டும்! ஆவணமாக்கப்பட வேண்டும் போற்றப்பட வேண்டும், முன்னுதாரணமாக வேண்டும்! எப்போது? அது தியாகமாக இருந்தால்! அது உண்மையாக இருந்தால்! இங்கோ நடக்காத சம்பவம் ஒன்று, நடந்ததாகக் கதை கட்டப்பட்டு, அதற்கு சமுதாயச் சீர்திருத்தம் போன்ற சாயம் பூசப்பட்டு, அப்பாவிகளை நம்பவைத்து ஏமாற்ற ஒரு அக்மார்க் முத்திரையை வாடிகன் வழங்கியுள்ளது. (போப் வழங்கியுள்ளார்). ஒரு பொறுப்பான, பல மதங்கள் சுமூகமாக வாழுகின்ற நாட்டில் உள்நோக்கத்துடன் கட்டுக் கதைகளுக்கு வரலாற்று அங்கீகாரம் கொடுப்பது போப்புக்கு அழகா? இந்தப் படைவீரர்களை “தியாகிகள்”” என்று கௌரவித்து ஒரு சமுதாயத்தின் பண்பாட்டையும் ஒரு நாட்டின் பாரம்பரியத்தையும் அழிப்பது சமயமா? சாகசமா? இந்தக் கேள்விகள் எல்லாம் போப்பிடம் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை. கிறிஸ்துவப் படை வீரர் போப்பின் ஆட்சியை நிலைநாட்ட இறந்து போனால் அவர் உயிர்த்தியாகி. அதே படைவீரர் ஆக்கிரமிக்கும் நாடுகளில் உள்ளவர்களின் உயிரை எடுத்தால் அவர் புனிதர். இது தானே கிறிஸ்தவம்? பாரதத்தில் உயிருடன் தீயிட்டுக் கொளுத்தி பலவிதமான சித்ரவதைகளை மதம் மாற மறுப்பவர்களுக்கு அளிக்கும் நிறுவனமான ஹவுஸ் ஆஃப் இன்க்விஸிஷன் (House of inquisition) நிறுவப்படவேண்டும் என்று கடிதம் எழுதியவர் ’புனித’ ஃபிரான்ஸிஸ் சேவியர், அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான அப்பாவிகளின் உயிரை பலிவாங்கிய கோவா ஹவுஸ் ஆஃப் இன்க்விஸிஷனை (Goa house of Inquisition) நிறுவ மன்னர் ஜான்-III க்கு 1545ல் கடிதம் எழுதியவர் ஃபிரான்ஸிஸ் சேவியர். (http://en.wikipedia.org/wiki/Goa_Inquisition ) இன்று ஃபிரான்ஸிஸ் சேவியர் புனிதர்! இவர் பெயரில் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் ஒரு தேவாலயம்! தமிழகத்தின் பிற பகுதியிலும் வட இலங்கையிலும் பல தேவாலயங்கள் ! இன்று இந்த தேவசகாயத்தைப் புனிதராக அறிவிக்க வேண்டும் என்று துடிப்பதும் இந்தக் கோட்டார் மறை மாவட்டமே. ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை! இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் கணிசமான அளவு இந்துக்கள், கிறிஸ்துவர்களாக மதம் மாறியுள்ளனர். இன்று தென் தமிழகத்தில், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல பிரசாரங்களும், நம் நாட்டிற்கு எதிராக சூழ்ச்சியும் நடைபெறுகின்றன. போப்புக்காக கொலை செய்தவர் கணிசமான இந்துக்களை தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மாற்றிவிட்டார். மீதமுள்ள இந்துக்களை மாற்ற போப்புக்காக கொலையுண்ட (?) கிறிஸ்துவ வீரரை தயாராக்குகிறது கிறிஸ்துவ சர்ச். இந்த கிறிஸ்துவ நோக்கத்துக்காக நம் நாட்டு மன்னர் மத வெறியனாக்கப்பட்டுள்ளார். நம் சமுதாயம் பிற்போக்குச் சமுதாயமாக ஜோடிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் ஈவு இரக்கமற்ற இரத்தக் காட்டேறிகளாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். வரலாற்று மோசடி நடத்தப்பட்டுள்ளது. விளைவு- மண்ணின்மைந்தர் தியாகி, புனிதர் என்ற ஜால வார்த்தைகளால் மண்ணின் மைந்தன் ஏமாற்றப்படுகிறான். இந்த மாதிரியாகக் கட்டுக்கதைகளைப் புனைந்து வரலாற்று மோசடிகளில் ஈடுபடுவது சர்ச்சுக்கு கைவந்த கலை. தமிழ்நாட்டிலேயே இதற்கு சான்று உண்டு. மயிலைக் கடற்கரையில் வந்திறங்கிய புனித தாமஸ் கதைதான் அது. வரலாற்றில் இல்லாத “தாமஸ்”” என்கிற மனிதனை உருவாக்கி அவனை சென்னையில் தங்கவைத்து அவன் ஒரு பிராம்மணப் புரோகிதரால் கொல்லப்பட்டான் என்று கட்டுக்கதை புனைந்து, அவனுடைய எலும்புக்கூட்டின் ஒரு பகுதி இன்றைய சாந்தோம் தேவாலயத்தில் இருக்கிறது என்கிற புளுகுமூட்டைகளையும் அதில் சேர்த்து வைத்த கத்தோலிக்க சர்ச்சுக்கு தென் தமிழகத்தில் மற்றொரு கதை புனையவா தெரியாது? ”புனித தாமஸ்”” போன்ற புனைவுதான் “தேவசகாயம்”” வரலாறும். உண்மையில் சொல்லப்போனால் ஏசு என்று ஒருவர் இருந்ததற்கே இவர்களிடம் ஆதாரம் கிடையாது. அதனால் தான் தற்போதய போப் திரு பெனெடிக்ட், “ஏசுநாதர், நாம் நினைத்ததை விட சுமார் 200 முதல் 500 ஆண்டுகளுக்கு முன் பிறந்திருக்கலாம்” என்கிறார். அப்படியென்றால், ஏசு பிறப்பை சுமார் 2050 ஆண்டு என்ற அடிப்படையில் சர்ச்சால் நிரூபிக்கப்பட்ட சாகசங்கள் புளுகுமூட்டைகள்! ஆக, இவர்களுடைய மொத்த சரித்திரமே புனைவுதான். மூவேந்தரும் கடையேழு வள்ளல்களும் போற்றிப் பின்பற்றி வந்த மரபை அழித்தொழிக்கும் வாடிகன் படைவீரர்களுக்கு, நாடுபிடிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் பாராட்டும் விருதும் நம் தமிழகத்தில் நடைபெறுவது முறைதானா? இனவுணர்வைப் பற்றி வாய்கிழியப் பேசும் அறிவுஜீவிகளும் அரசியல்வாதிகளும் இந்த இழி செயலுக்கு துணைபோவது சரிதானா? தமிழ் மீதும் பண்பாடு மீதும் பற்றுள்ளவர்கள் இந்தப் புனிதப் புரட்டை முறியடிக்க அணிதிரள வேண்டும்!

Sunday, November 25, 2012

மிருக வதைப் பூங்கா


'இந்தப் படத்தில் எந்த விலங்கும் துன்புறுத்தப்படவில்லை' - இது விலங்குகளைப் பயன்படுத்தும் எல்லாப் படங்களிலும் இடம்பெற்றாக வேண்டிய சட்டபூர்வமான அறிவிப்பு. விலங்குகளை ஏதேனும் ஒரு வகையில் துன்புறுத்தியதாகத் தெரிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விலங்குகள் பயன்படுத்தப்படும் படங்களில் இந்தச் சான்றொப்பம் அவசியம் இடம்பெற வேண்டும். அரசுக்கு விலங்குகள் மீது இத்தனை கரிசனமா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் வண்டலூரில் நடப்பதைப் பார்த்தால் இது ஊருக்குத்தான் உபதேசம் என்று தோன்றுகிறது. வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சில நாட்களுக்கு முன்னால் யானை ஒன்று இறந்தது. திடீரென்று ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் அது மரணம் அடைந்ததாகப் பூங்கா நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அந்த யானை சரியாகச் சாப்பிடாததே மரணத்திற்குக் காரணமாக அமைந்தது என அந்தச் செய்தி தெரிவித்தது. பூங்காவில் மிருகங்களுக்கு உணவிடுவதற்காகக் கொள்முதல் செய்யப்படும் மாமிசத்தின் அளவு ஒரு நாளைக்கு 80 கிலோதான். அதைத்தான் அங்குள்ள எல்லா மிருகங்களுக்கும் பகிர்ந்தளிக்கிறார்கள். அங்கிருக்கும் முதலையின் உணவுத் தேவை மட்டுமே 80 கிலோ மாமிசம் என்பதை கவனிக்க வேண்டும். இதில் மற்ற மிருகங்களுக்குக் கொடுத்த பிறகு முதலை சாப்பிடும் உணவு 2 கிலோ மட்டுமே. எல்லா மிருகங்களுக்கும் இதே கதிதான். கடல் கழுகு என்ற மிருகம் கடல் நீரில் மட்டுமே வாழும். இங்கே அதற்கு நீரே காண்பிக்கப்படுவதில்லை என்பது கண்ணில் நீரை வரவழைக்கிறது. இதெல்லாம் போதாதென்று இன்னொரு கொடூரமும் நடக்கிறது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை. செவ்வாயன்று அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். திங்கட்கிழமை மதியம் சாப்பிடும் மிருகங்களுக்கு அடுத்தது புதன் மதியம்தான் உணவு வைக்கப்படுகிறது. அதுவரை கொலைப் பட்டினி. இது மிருக வதை இல்லை என்றால் வேறு எது மிருக வதை? அதிர்ச்சி தரும் இந்தத் தகவல்கள் அரசல் புரசலாகப் பேசப்படுபவை அல்ல. பிரபலமான நாளிதழில் வந்தவை. இந்தத் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது மன்னிக்க முடியாத அலட்சியம் என்பதில் சந்தேகமில்லை. சரியாகப் பாதுகாக்க முடியாவிட்டால் அந்த விலங்குகளைக் காட்டில் விட்டுவிடலாம். மாபெரும் அறிவியல் பூங்கா என்னும் பெருமையைக் காப்பதற்காக விலங்குகளைப் பட்டினி போட்டுக் கொல்ல வேண்டாம்.

Saturday, November 24, 2012

தாக்கரே மறைவு ஏற்படுத்திய சலனம்

சிவசேனை கட்சித் தலைவர் பால் தாக்கரே கடந்த 17ஆம் தேதி மாலை காலமானார். 86 வயதான தாக்கரே, கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். வருடந்தோறும் தசரா திருவிழாவின் போது தொண்டர்களிடையே உரையாற்றுவது அவரது வழக்கம். கடந்த மாதம் அவரால் நேரில் வரமுடியாததால் ஒளிப்படத்தில் தோன்றி பேட்டியளித்தார். அப்போது தனக்கு பின்னால் தனது மகனும் சிவசேனையின் தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கும், பேரன் ஆதித்ய தாக்கரேவுக்கும் தொடர்ந்து ஆதரவு தருமாறு தொண்டர்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அரசியல் கார்டூனிஸ்டாக வாழ்க்கையைத் துவக்கிய பால் தாக்கரே, 1966இல் சிவசேனைக் கட்சியை நிறுவினார். மேலும் ‘சாம்னா’ என்ற பத்திரிக்கையைத் துவக்கி அதன் மூலம் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்தார். கட்சி ஆரம்பித்த சில மாதங்களில் நடந்த மாநாட்டிலேயே 5 லட்சம் மக்கள் திரண்டார்கள். 1980களில் இருந்து சிவசேனைக் கட்சி தேர்தல் களத்தில் குதித்தது. 1990களில் பா.ஜ.க.வுடன் இணைந்து சிவசேனை ஆட்சியமைத்தது. சிவசேனையின் மனோகர் ஜோஷி முதல்வராகப் பதவியேற்றாலும் பால் தாக்கரே தான் நிஜ முதல்வர் என்ற பேச்சு கிளம்பியது. தீவிரமான மகாராஷ்ட்ர வெறியராகவும், அதே நேரத்தில் சிறந்த நாட்டுப்பற்றுமிக்கவராகவும் தாக்கரே விளங்கினார். தீவிர இந்துத்துவவாதியாகவும் அவர் திகழ்ந்தார். எந்த சமயத்திலும் தனது கொள்கையில் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. ‘மும்பை மாநகரம் மராட்டியருக்கே’ என்ற கோஷத்துடன் மும்பையில் கலவரம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் மும்பையை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவானது. மேலும் 1993இல் மும்பையில் நடந்த இந்து-முஸ்லிம் கலவரத்துக்கு பால் தாக்கரேவின் உணர்ச்சியைத் தூண்டும் பேச்சுதான் காரணம் என்று ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் குற்றம்சாட்டியது. அருண் சால்வா போன்ற பல தாதாக்கள் சிவசேனையில் இணைந்ததால் அது தாதாக்களின் கட்சி என்று வர்ணிக்கப்பட்டது. ஒரு நேரத்தில் ‘மும்பை அனைவருக்கும் சொந்தம்’ என்று பேட்டியளித்தபோது சிவசேனையின் எதிர்ப்பை அவர் சந்திக்க நேரிட்டது. காஷ்மீர் பிரச்சினை தீரும்வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவு கூடாது என்று வலியுறுத்தினார். காதலர் தினம் போன்ற அயல்நாட்டு கொண்டாட்டங்களை இந்தியாவில் கொண்டாட கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 25 வருடங்களுக்கு மேலாக பா.ஜ.க.வின் கூட்டணியில் சிவசேனை நீடித்து வருகிறது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த சமயத்தில் அவர்களுக்கு பால் தாக்கரே தொடர்ந்து சங்கடங்களை ஏற்படுத்தி வந்தார். 2007ஆம் ஆண்டு நடந்த இந்திய ஜனாதிபதி தேர்தலில் பைரோன்சிங் ஷெகாவத்தை ஆதரிப்பது என்ற தே.ஜ.கூட்டணியின் முடிவை மீறி மராட்டியர் என்பதால் காங்கிரஸ் வேட்பாளரான பிரதீபா பாட்டிலை சிவசேனை ஆதரித்தது. பால் தாக்கரே தனது அரசியல் வாரிசாக தனது மகன் உத்தவ் தாக்கரேவை தலைவராக அறிவித்தவுடன் கட்சியில் பிளவு ஏற்பட்டது. 2006இல் பால் தாக்கரேவின் தம்பி மகன் ராஜ் தாக்கரே கட்சியை உடைத்து மாகாராஷ்ட்ர நவநிர்மாண் சேனா என்ற கட்சியை நிறுவினார். அவரது கட்சியும் மும்பையில் வசிக்கும் பிற மாநிலத்தவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்து வருகிறது. பால் தாக்கரேவின் மரணத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தார்கள். பால் தாக்கரே இறந்தபோது மும்பை மாநகரம் மயான அமைதியாக காட்சியளித்தது. அவர் இறக்கும் சில நாட்களுக்கு முன்னதாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் பால் தாக்கரேவின் மரணம் காரணமாக மும்பை நகரம் ஸ்தம்பித்து நின்றதை கண்டித்து சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட ரேணு சிங், ஷகீன் தாஹா என்ற இரண்டு பெண்கள் மத உணர்வைப் புண்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு மும்பை போலிசாரால் கைது செய்யப்பட்டார்கள். இந்த கைது சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.